பாரத சமுதாயம்

மனிதருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில்
வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின்றித் தரு நாடு - இது
கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம்
கணக்கின்றித் தரு நாடு .
இனியொரு விதிசெய் வோம் - அதை
எந்த நாளும் காப்போம்,
தனியொரு வனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம் .
எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
என்றுரைத்தான் கண்ண பெருமான்,
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் .
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்,
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் .

No comments:

Followers